“குட் மார்னிங் ஸ்டூடெண்ட்ஸ்” என்று அறிவியல் வகுப்பின் முன் நின்று பத்ரிநாத் புன்னைகைத்தார். பத்ரிநாத் சென்னை பெரம்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள அறிவியல் ஆசிரியர். பல வருடங்களாக அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சிறிது காலம் முன்னர் தனது பூர்விகமான சென்னைக்கு குடும்பத்துடன் தற்காலிகமாக குடிபெயர்ந்தவர். வயது ஆக ஆக மிச்சிகன் குளிர் போர் அடிக்க அமெரிக்காவில் வேறு எங்கும் செல்ல மனமின்றி தாய்நாட்டிற்கு சில காலம் இருக்க இது சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று முடிவு செய்தார்.
ஒரு சிலர் “குட் மார்னிங்” என்று முணுமுணுத்தார்கள். காலை ஏழு மணி மற்றும் அந்த பள்ளியாண்டின் முதல் வகுப்பு என்பதாலும் அவர் ஆச்சரியப்படவில்லை.
“Welcome to science,” என்று அவர் தொடர்ந்தார். 52 வயது ஆனாலும் அவருடைய ஜிம் பாடியை கட்டுக்குள் வைத்திருந்தது அவருடைய Levi பிராண்ட் ஜீன்ஸ் மற்றும் Van Heusen ஷர்ட்டும் .
உங்கள் அனைவருக்கும் நல்ல விடுமுறை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். என் பெயர் பத்ரிநாத். உங்கள்அறிவியல் ஆசிரியர் திருமதி உஷா தன்னுடைய குழந்தைப்பேறுக்காக விடுமுறையில் சென்றிருக்கிறார். ஆகவே இந்தஆண்டில் நான் தான் உங்கள் புதிய அறிவியல் ஆசிரியர். வகுப்பைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் கேள்விகள்இருக்கிறதா? ”
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து இப்போதான் எல்லாம் அடங்கியிருந்த நிலையில் பள்ளிக்கூடம் முழுவதும் புதிய வண்ணங்களால் பெயிண்ட் அடித்திருந்தனர். சென்னையின் வெட்பம் தாளாமல் பள்ளியில் முதல் நாளாகவும் இருப்பதால் மாணவர்கள் அந்த புது வாசத்தை ரசித்த வண்ணம் தாங்கள் விடுமுறையில் செய்த, பயணித்த, இன்ப, சோக கதைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். திடீரென்று வகுப்புக்குள் நுழைந்த இந்த புதிய ஆசிரியர் பேசியதை கேட்டு அமைதியாகஇருந்தனர்.
முகத்தில் புன்சிரிப்போடு “கவலைப்படாதீங்க! இன்னிக்கு நான் கிளாஸ் எடுக்கப்போறதில்லை. என்ன பத்தியும் நான் என்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன் என்றும் பேசுவோம். அதே சமயம் உங்கள பத்தியும் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறன்.
சிறு சலசலப்புடன் மாணவர்கள் பெருமூச்சு விட்டது நன்றாக கேட்டது.
I used to live in US, Michigan. நான் அமெரிக்காவில் மிச்சிகனில் வசித்து வந்தேன். ஐ ஹவ் மை வைப் அண்ட் 2 சன்ஸ். மூத்தவன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க சமீபத்தில் திருமணம் முடிந்தது . சின்ன மகன் கல்லூரியில் 2 வது ஆண்டில் இருக்கிறான். கல்லூரி பரிமாற்ற திட்டம் மூலம் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறான். நான் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தேன், அங்கு சைபர் வார்ஃபேர் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த ரிசெர்ச் செஞ்சிகிட்டு இருந்தேன்.
அமெரிக்காவில் நீண்ட காலமாக ஒர்க்கிலேயே பிஸியாக இருந்ததால் இங்க வர முடியவே இல்ல. பசங்க பெரியவங்க ஆயிட்டதுனால் நானும் என் மனைவியும் சென்னைக்கு வந்து எங்கள் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரெண்டு வருஷம் நேரம் செலவிட முடிவு செஞ்சிருக்கோம். அட் தி சேம் டைம், இணைய பாதுகாப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சி வசதியை இங்கு உருவாக்க விரும்புகிறோம், இது உங்கள மாதிரி மாணவர்களின் வாழ்வாதாரங்களில் அதன் விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்ட உதவ முடியும்னு நினைக்கிறோம்.
என் மனைவியும் அதே தொழிலைச் சேர்ந்தவர். ஸோ இந்த புதிய வேலையில் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சில புதுமையான யுக்திகளில் கவனம் செலுத்தவுள்ளோம். இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் சயின்ஸ் எவ்வாறு உருமாறப்பெற்றுள்ளது என்பதை என்னுடைய அனுபவம் மூலம் மாணவர்கள் புரிந்துகொள்ள இங்கே இப்போ சேர்ந்திருக்கிறேன், எனது மனைவி புதிய கம்பெனி ஆரம்பிப்பதற்கான வேலைகளை பார்த்து வருகிறாள் .
சரி, கேள்விகள் ஏதும் இல்லை என்றால், நான் இன்றைய அட்டெண்டன்சை பதிவு செய்ய போறேன். “நான் உங்க நேம் கூப்பிடும்போது, ‘யெஸ் சார்’ என்று சொல்லுங்க, சரியா?”
அரவிந்த்? யெஸ் சார்..
அண்ணாமலை? யெஸ் சார்
பாரதி! “யெஸ் சார், அண்ட் வெல்கம் டு அவர் ஸ்கூல் சார்”
நன்றிங்க பாரதி!
திவ்யா? யெஸ் சார்!
நான் விக்ரம். மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என் பேர் கூப்பிடும்போது கையை மட்டும் தூக்கலாமா இல்ல, யெஸ் சார் சொல்லலாமா ?
இந்த புது வாத்தி அமெரிக்கால இருந்து வந்துருக்கார். நாம என்னடானா இப்போதான் அமிஞ்சிக்கரையவே தாண்டி வியாசர்பாடிக்கு வந்துருக்கோம். இந்த ஸ்கூல்ல சேர்ந்தாதான் வாழ்க்கையே உருப்படும்னு என் அப்பா நினைச்சி சேர்த்துவிட்டுருக்கார்.
இவர் ரொம்ப வருஷம் அங்க வேலை செஞ்சிட்டு தமிழ் கொஞ்சமாவும் இங்கிலிஷ் நிறையவும் சும்மா நம்ம “தல” ரேஞ்சுக்கு பேசுறார். என்னோட குரல கேட்டு இங்லிஷ் வாசமே இந்த பையன்னுக்கு இல்லனு சிரிச்சிடுவாரோ? இந்த பொண்ணுங்கவேற என்ன ஓட்ட போறாங்க.
நான் ‘உள்ளேன்’ சொன்னா எப்படி இருக்கும்?ஒருவேளை என்ன இத வெச்சி வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுவாரோ? நச்சுனு யெஸ் சார் சொல்லிட்டு உட்கார்ந்துடலாமே, இதுக்கு ஏன் இவ்வளவு கூச்சம்!
இதே கிளாசில் இருக்கும் முதல் பெஞ்ச் விக்ரம். என்ன பண்ணுவான்னு பாத்தேன். அவனுக்கென்ன! ராஜா வீட்டுகன்னுகுட்டி. சும்மா இங்கிலீஷிலேயே பூந்து விளையாடுவான். இந்த கிளாஸ்சுல இருக்குற பாதி பசங்க பொண்ணுங்க அவனை சுத்தியே இருப்பாங்க.
இந்த போனில் மியூட் பட்டன் மாதிரி எதாவது இருந்தா இவர் என் பெயர் வரும்போது, அத தட்டி விட்டு நம்ம பேரு சொல்லி கூப்பிடற குழப்பத்தில் இருந்து தப்பிச்சிக்கலாம்.
ஹரிஷ்? யெஸ் சார்
கார்த்திக்? யெஸ்! என் பின்னால் இருந்து. அடடா! இவன் எழுந்திருச்சு சொன்னானா இல்ல உட்கார்ந்துக்கிட்டே சொன்னானா, தெரியலையே !!
மதன்? ஹெலோ சார்! வெல்கம்.
தேங்க்ஸ் மதன்.
ஒபீலியா? “யெஸ் சார் , ஐ யாம் ஹியர்!” அவள் தெளிவாக உரக்க சொன்னாள் .
நான் முகம் சுளித்தேன். சரி, நான் இதே போல் சத்தமாக சொல்ல வேண்டுமா?. நான் நானாக இருக்கணும், கடவுளே! ஏன் என்னை மட்டும் எங்க அப்பா இங்க சேத்து என் உயிர வாங்கறோரோ, தெரியல.
ராகுல்?
நான் அறையைச் சுற்றிப் பார்க்கிறேன். பதில் இல்லை.
ஐயையோ! என்னோட பேரையா கூப்பிட்டார்? நான் கவனிக்காமல் இத பத்தியே யோசனை செஞ்சிகிட்டு இருந்தேனோ? நான் ஒரு முட்டாள் போல இருக்க போறேன்.
ராகுல் ஆப்சென்ட் சார், என் பக்கத்தில் இருக்கும் குமார் சொன்னான். அப்பாடா !
“நன்றி குமார், உட்காருங்க” பத்ரிநாத் சொன்னார்
அடுத்து, ரம்யா?
சரி, அவர் நிச்சயமாக ரம்யா பேரை தான் கூப்பிட்டார் .
கடவுளே, நான் சரியான வகுப்பில் இருக்கிறேனா? அவர் என் பெயரை அழைக்காவிட்டால் என்ன செய்வது? அறிவியலில் பதிவு செய்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் இன்று காலை எனது அட்டவணையை சரி பார்த்தது நியாபகத்திற்கு சடாலென வந்தது.
யெஸ் சார்! ரம்யாவின் கீச்சு குரல் ஒலித்தது .
ஆம், நானும் அது மாதிரி மெதுவாக பேசி உட்கார வேண்டியதுதான். இது உண்மையில் பள்ளியின் முதல் நாள். நீங்கள் குழம்பியதை யாரும் ஒரு வருஷம் கழித்து நினைவில் கொள்ள மாட்டார்கள், இல்லையா?
ரஜினி ? “இதோ,” முணுமுணுத்த ரஜினி.
நம்ம தலைவர் மாதிரி சும்மா கெத்தா இல்லாமல் மெதுவாக சொன்னான்.
பத்ரிநாத் சுற்றி பார்த்து “எனக்கு கேட்கவில்லை ரஜினி” ஆர் யு ஹியர் ?
ஓ, கடவுளே! எனக்கு பயமாக இருந்தது. நான் அதைச் சரியாக தெளிவாகப் சொல்லவில்லை என்றால் என்ன செய்வது?
யெஸ் சார் ! ரஜினி மீண்டும். இந்த முறை சத்தமாக .
“சூப்பர், நன்றி” ரஜினியை பார்த்து பத்ரிநாத் சிரிப்புடன் கண்ணடித்தார் .
“ஹ்ம்ம்,” பத்ரிநாத் மெதுவாக அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டெரை பார்த்து “ச ங் க மி தா”
“அவள் சங்கமித்ரா,” எனக்கு முன்னால் சில வரிசைகள் முன்னாள் இருந்த லட்சுமி கேலியாக தெளிவுபடுத்தினாள். எல்லோரும் அமைதியாக மனதிற்குள் சிரித்தனர்
ஓ, சாரி சங்கமித்ரா. அவள் பெயரை பதிவு செய்தார்.
விக்ரம்?
என் வயிற்றுக்குள் இருந்து குபீரென ஒரு உருளை மேலே வந்தது போல் இருந்தது. கடைசியாக, இது என்னோட பெயரா இல்ல நம்ம கிளாஸ் ஹீரோ விக்ரமா, தெரியாமல் மெதுவாக எழுந்திரிக்க முற்பட….
விக்ரம், “ஹலோ சார், ஹௌ ஆர் யூ? கிளாட் டு ஹவ் யு இன் அவர் கிளாஸ்”
நன்றி விக்ரம். ஐ யாம் கிளாட் டு பி ஹியர் அஸ் வெல். இந்த வருஷம் நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
விக்ரம்?
நான் பீதியில் நனைந்தேன். இனி தப்ப முடியாது.
விக்ரம்? மறுபடியும் ஆசிரியர் அழைக்கவே யாரோ ஒருவன் என் பின்னாலிருந்து என் தோளை தட்ட சிலிர்த்து எழுந்தேன்
ஆப்சென்ட் சார்!
ஐயோ, எங்க போச்சு இந்த மியூட் பட்டன்! விக்ரம் தன்னுடைய கால் தடதடக்க எதை எதையோ ஹேக் பண்ணுறாங்க நம்ம ஆளுங்க, இந்த பாழா போன பயத்தை போக்க எதையாவது கண்டு புடிக்க இவருகிட்ட நான் நேரம் கிடைக்கிறப்போ பேசியே ஆகணும்.
மீண்டும் ஒரு முறை “யெஸ் சார்” என்று பெருமூச்சுடன் சொல்லி உட்கார்ந்தான்.